October 18, 2024

அட்மா திட்டத்தின் விவசாயிகளுக்கு கிராம வேளாண்மை முன்னேற்றக் குழு பயிற்சி

நாமக்கல், ஜூலை 9

ராசாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ‘கிராம அளவிலான வேளாண்மை முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் பயிற்சி’’ வழங்கப்பட்டது.

நாமக்கல் வட்டாரம், ராசாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் ‘’கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரீப் பருவப் சாகுபடி தொழில் நுட்பங்கள்” குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, தலைமை வகித்து, வேளாண்மைத் துறையின் மானியத்திட்டங்கள், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், பயிர் காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி கௌரவ நிதித் திட்டம் விபரங்கள் குறித்து விளக்கமளித்து பயிற்சியளித்தார்.
மேலும் சிறப்பு பயிற்றுநர் மாதேஸ்வரன்., துணை வேளாண்மை அலுவலர்., (ஒய்வு) தற்போது பயிரிடப்படும் பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை முறைகள், உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார்.
நாமக்கல் மாவட்ட மண் ஆய்வு நிலையம்., உயிரியல் கட்டுப்பாடு ஆய்வக வேளாண்மை அலுவலர் தரணியா, மண், நீர் மாதிரி, மண், நீர் ஆய்வின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்தும்., உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகத்தின் மூலம் வழங்கும் டிரைகோடெர்மா விரிடி, சூடோமோனாஸ், ஒட்டுண்ணிகள் குறித்து விளக்கமளித்து பயிற்சியளித்தார்.

மேலும், வட்டார வேளாண்மை அலுவலர் காஞ்சனா கலந்து கொண்டு இயற்கை விவசாயத்தின் நோக்கம், பயன்கள், சிறப்புகள் குறித்தும் மீன்அமிலம், அமிர்தகரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், பூச்சி விரட்டி, நோய் விரட்டி தயாரித்தல் பயன்படுத்துதல் குறித்தும் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து பயிற்சியளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் மாலதி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துறை சார்ந்த மானியத் திட்டங்களை எடுத்துக் கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் இரமேஷ் அட்மா திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் கவிசங்கர் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயிகளுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.