October 18, 2024

இயற்கை வேளாண்மை – விதை நேர்த்தி இடுபொருள் பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை

இயற்கை வேளாண்மை அல்லது நஞ்சில்லா விவசாயம் அல்லது அங்கக வேளாண்மை என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இவ்வேளாண்மை முறை தொன்று தொட்டு விவசாயிகளால் பின்பற்றப்பட்டு வந்தாலும் பசுமை புரட்சியின் எதிர் மறை விளைவுகளை உணர்ந்த பின்னர் மீண்டும் புத்துயிர் பெற மத்திய, மாநில அரசுகள் ஊக்கமளிக்கின்றன. இயற்கை வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் வளத்தை காப்பதோடு மட்டுமல்லாமல், மண் வளம் அதிகரிக்கவும் வழி வகை செய்கின்றன. இந்த முறையில் இரசாயன உரங்கள், பூச்சி, பூஞ்சாணக் கொல்லிகள் மற்றும் களைக் கொல்லிகள் முழுவதுமாக பயன்படுத்தப்படுவதில்லை. இதன் மூலம் நஞ்சில்லா மாசற்ற சுற்றுச் சு+ழலில் நல்ல பயிர் வளர்ச்சி மற்றும் மகசூலினைப் பெற முடிகின்றது என இயற்கை வேளாண்மையில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்சியாளர் வேளாண்மை அலுவலர் பெ.லதா தெரிவிக்கிறார்.

இயற்கை வேளாண்மையில் பயன்படுத்தப்படும் வளர்ச்சி ஊக்கிகளில் முதன்மையானது பீஜாமிர்தம் ஆகும். இதைப்பற்றி இங்கு விரிவாக காண்போம். இது விதை நேர்த்தி செய்ய பயன்படுகிறது. இக்கரைசலைக் கொண்டு விதை நேர்த்தி செய்து பின்பு விதைகளை விதைக்கலாம். இதன் மூலம் விதை மற்றும் மண்ணின் மூலம் பரவும் பூஞ்சானங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.

பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை
5 கிலோ பசுஞ்சாணத்தை ஒரு துணியில் மூட்டை போல் கட்டி 20 லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் மூழ்கும் படி 12 மணி நேரம் தொங்க விட வேண்டும். வேறு ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் சுண்ணாம்பு பவுடரை கரைத்து தனியாக ஒரு இரவு வைத்திருக்க வேண்டும். நீரில் ஊறிக் கொண்டுள்ள 5 கிலோ பசுஞ்சாண மூட்டையை 2 – 3 முறை நன்கு அதில் உள்ள திரவம் நீரில் கலக்குமாறு பிழிந்து விட வேண்டும். அதன்பின் ஒரு கைப்பிடி அளவு தோட்டத்து மண்ணை அதில் இட்டு கலக்க வேண்டும். இக்கலவையுடன் 5 லிட்டர் கோமியமும், முன்பே தயாரித்து வைக்கப்பட்ட சுண்ணாம்பு கரைசலையும் சேர்க்க வேண்டும். தற்போது பீஜாமிர்தக் கரைசல் தயார் நிலையில் உள்ளது.

பயன்படுத்தும் முறை

  1. 20 லிட்டர் பீஜாமிர்தத்தை 100 கிலோ விதையுடன் நன்கு கலந்து நிழற்பாங்கான இடத்தில் உலர விட்டு பின்பு விதைக்க வேண்டும்.

2. கிழங்கு வகைகள், தண்டு மற்றும் நாற்றுகள் நடவு செய்யும் போது 5 நிமிடம் வேரினை அல்லது விதை கிழங்குகளை பீஜாமிர்த கரைசலில் ஊறவைத்து பின் நடவு மேற்கொள்ள வேண்டும்.