October 18, 2024

பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூன் 26

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பட்டதாரி இளைஞர்கள் வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) வி.எம்.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வேளாண் நிதி நிலை அறிக்கையில் பட்டபடிப்பு முடித்த இளைஞர்களை ஊக்குவித்து வேளாண் தொழில் முனைவோராக்கும் விதமாக இளங்கலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு வேளாண் துறை சார்ந்த தொழில் துவங்க ரூ.1 இலட்சம் மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயனாளி தனது மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் PMFME) / வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் (AIF) கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் நிறுவ வேண்டும். அனுமதிக்கக்கூடிய திட்டங்கள் தொடர்பான கூடுதல் விபரங்களை https://agriinfra.dac.gov.in, மற்றும் https://pmfme.mofpi.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.

வங்கி கடன் உதவியுடன் கூடிய தொழில்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் மானிய தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கிக் கடன் உதவி பெற்றதற்கான சான்றிதழைக் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் பட்டதாரிகள் AGRISNET www.tnagrisnet.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தொழில் துவங்க ஆர்வம் உள்ள பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.