October 18, 2024

மணப்பாறை அருகே மலையடிப்பட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் ஒரு நாள் பயிற்சி

திருச்சி, ஜூலை 13

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டாரம் வேளாண்மைத்துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை கீழ் 2024-25 ஆம் ஆண்டு மலையடிப்பட்டி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைப்பெற்றது. இதில் மணப்பாறை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தலைமை வகித்தார்.

வேளாண்மை அலுவலர் கண்ணன் பேசுகையில், மண் புழு உரம் தயாரித்தல் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி மண் புழு வகைகள், தொட்டி அளவு, ஒரளவு மக்கிய கழிவை கொட்டும் முறைகள், கழிவுகள் நிரம்பிய தொட்டி அதில் புழு விடுதல் முறைகள், தொட்டியில் இடைவெளி விட்டு கல் அடுக்கும் முறைகள், கல் இடுக்குகளில் உரம் வெளி வரும் முறைகள் மற்றும் மண் புழு உரம் சேகரித்து அதனை சந்தைப்படுத்தும் முறைகள் பற்றியும் கூறினார். மண் புழுவின் தன்மை பயிர்களுக்கு மண் புழு உரம் பயன்படுத்தும் அளவு போன்றவற்றை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். உயிர் உரங்கள் பயன்பாடு மண் வளம் காக்கும் அங்கக இடுபொருட்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஒட்டுண்ணி அட்டைகள் பயன்படுத்துதல் இன கவர்ச்சி பொறி பயன்படுத்துதல் விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். வேளாண்மை உதவி இயக்குனர் மோகனா முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் தி;ட்டத்தின் சிறப்பு கூறுகளை விரிவாக எடுத்துரைத்தனர். பசுந்தாள் விதை இருப்பு அதனின் விதைப்பு முறைகள், உழவன் செயலின் பயன்பாடுகள் மற்றும் தமிழ் மண் வளம் பற்றியும் மணப்பாறை வேளாண் விரிவாக மையத்தில் உள்ள உயிர் உரங்கள் பயன்பாடு அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

அதன்பின் இயற்கை விவசாயி மற்றும் முன்னோடி விவசாயியான தார்சிஸ் இயற்கை முறையில் பஞ்சகாவியா, மீன் கரைசல், அமுத கரைசல் மற்றும் அரைப்பு மோர் கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தனர். இறுதியில் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா நன்றி உரை கூறினார். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் சத்திய சீலன் செய்திருந்தார்.