October 18, 2024

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த பயிற்சி

இராமநாதபுரம், ஜுலை 30

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கபட்ட கும்பரம் கிராமத்தில் முதலைமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உரப்பயன்பாடு குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் கூறுகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் பயிர் சாகுபடி செய்வதற்கு முன் மண் பரிசோதனையின் அடிப் படையில் உரமிட்டால் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம் என்றார். உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் கலைவாணி மண் மாதிரி சேகரித்தல் மண்வள அட்டையை பயன்படுத்தி உரம் இடுதல்,திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களின் பயன்கள் மற்றும் உபயோகம் குறித்து விளக்கி பேசினார். வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் கண்ணையன் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, உயிர் உர விதை நேர்த்தி, அங்கக உரமிடல், உர நிர்வாகம் குறித்து விளக்கி பேசினார். உதவி வேளாண்மை அலுவலர் முகமது யூசுப் விவசாய கடன் அட்டை திட்ட பயன்கள், தேவையான ஆவணங்கள் பற்றி பேசினார். பயிற்சி முடிவில் விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.