October 18, 2024

பயறுவகை பயிர்களில் சான்றளிக்கப்பட்ட விதைகளின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த விவசாயிகள் பயிற்சி

புதுக்கோட்டை, ஆக.2

புதுக்கோட்டை வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் 2024-25-ம் ஆண்டிற்கு பயறுவகை பயிர்களில் சான்றளிக்கப்பட்ட விதைகளின் பயன்பாடு, விதை நேர்த்தி மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி ஆதனக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. பயிற்சியில் எம்.ஆதிசாமி வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசன திட்டம்) கலந்து கொண்டு நுண்ணீர் பாசன திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் அதனை பெற விரும்பும் விவசாயிகள் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள், பயறுவகை பயிர்களில் மேம்படுத்தப்பட்ட சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பல்வேறு கருத்துக்களை விவசாயிகளிடம் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல் குறிப்பாக நெகிழி பயன்பாட்டினால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை சு.அன்பரசன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வேளாண்மைத்துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு மானிய விபரங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். மேலும் த.ஸ்வர்ணா வட்டார வேளாண்மை அலுவலர் விதை நேர்த்தி தொழில்நுட்பங்கள் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார். அதன்பின் உதவி விதை அலுவலர் சாமிநாதன் பேசுகையில் விதைச்சான்று பெறும் வழிமுறைகள், சான்று பெற்ற விதைகளின் வகைகள், விதைப்பண்ணை அமைத்த விசாயிகள் பின்பற்ற வேண்டிய சாகுபடி முறைகள் மற்றும் விதைச்சான்று அலுவலர்களின் வயல் ஆய்வு போன்ற பல்வேறு முக்கிய கருத்துக்களை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

முன்னதாக அப்பகுதி உதவி வேளாண்மை அலுவலர் இரா.பண்டிச்செல்வி, வரவேற்புரை வழங்கினார். பயிற்சியில் அப்பகுதி விதைப்பண்ணை விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகள் 40 நபர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பா.தேவி நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப ¼ மலாளர்கள் லா.அருளரசு மற்றும் ரா.ஸ்ரீநிதி ஆகியோர் செய்திருந்தனர்.