October 18, 2024

ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

இராமநாதபுரம், ஆக.7

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டாரம், வேளாண்மை துறையின் அட்மா திட்டத்தின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மானாங்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயறு வகை பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் நிர்வாகம் குறித்து விவசாயிகள் பயிற்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிவகாமி வேளாண்மை உதவி இயக்குனர், விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத்துறை, ராமநாதபுரம் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதை நேர்த்தி முறைகள், சான்று நிலை விதைகள் பயன்கள், அங்கக சான்று பெறுவதற்கான வழிமுறைகள், பயறு வகை பயிர்களுக்கு இலைவழி டிஏபி கரைசல் தெளித்தல் மற்றும் மூலிகை பூச்சி விரட்டி தயாரித்தல், பஞ்சகாவியம் தயார் செய்தல், மேலும் அங்கக வேளாண்மையில் பின்பற்ற வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்க உரையாற்றினார்.

பயிற்சியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர்களின் விதைகள் மானியத்தில் வழங்கப்படுவது விவசாயிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது. மேலும் நெல் விதைப்பிற்கு முன் பசுந்தளை பயிர்களை சாகுபடி செய்து அவற்றை பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து பின்னர் நெல் விதைப்பு செய்யும் பொழுது மண்ணின் பௌதிகத் தன்மை மேம்படுத்தப்பட்டு மண்ணின் அங்கக வளம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் இயற்கை முறையில் பயிருக்கு தேவையான தழைச்சத்து கிடைக்கின்றது என பானுமதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் கூறினார். பயிற்சி முடிவில் பவித்ரன் உதவி தொழில்நுட்ப மேலாளர் நன்றி உரை கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை சண்முகநாதன் உதவி வேளாண்மை அலுவலர் செய்திருந்தார்.